திருத்தணி: திருத்தணி அருகே விவசாய நிலத்திலிருந்து திடீரென புகை மற்றும் சூடான நீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சந்தானகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அயோத்தியன் (45). இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று மதியம் தரையிலிருந்து திடீரென புகை தானாக வெளியேறிது. இதனை அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுகுறித்து வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் யாசர் மற்றும் கிராமத்தினர் மேற்கண்ட வயல்வெளிக்குச் சென்று பார்த்தபோது, பூமியில் இருந்து அரைமணி நேரத்திற்கு மேலாக புகை வந்ததை தொடர்ந்து அங்கு நீரும் வந்துள்ளது. தொடர்ந்து மக்கள் அந்த நிலத்தில் சிறிய குழி தோண்டியபோது அதில் வந்த தண்ணீர் சூடாக இருந்தது. எதனால் பூமியில் இருந்து புகை வந்தது, தண்ணீர் ஏன் சூடாக உள்ளது என எந்த விபரமும் தெரியாததால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.