Sunday, June 16, 2024
Home » 2மாத முயற்சி தோல்வி எதிரொலி அதிமுகவுடன் கூட்டணி பேச்சை நிறுத்தியது பாஜ மேலிடம்: தனி அணி அமைக்க ஆலோசனை தீவிரம்

2மாத முயற்சி தோல்வி எதிரொலி அதிமுகவுடன் கூட்டணி பேச்சை நிறுத்தியது பாஜ மேலிடம்: தனி அணி அமைக்க ஆலோசனை தீவிரம்

by Ranjith

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக, பாஜ கூட்டணி 2019 மக்களவை தேர்தல், 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி இடம்பெற்றது. கடந்த சில மாதங்களாக அதிமுகவுக்கும், பாஜவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குறிப்பாக அண்ணாமலை. எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி, அதிமுக மாஜி அமைச்சர்கள் பலரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று5 மாதங்களுக்கு முன் அறிவித்தார்.

மேலும், 1991-1996ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலம்தான், நாட்டிலேயே மோசமான ஊழல் நிறைந்த ஆட்சி என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். இதனால் டெல்லி மேலிடத்தில் அண்ணாமலை மீது எடப்பாடி நேரடியாக புகார் செய்தார். அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வற்புறுத்தினார். ஆனால், அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது மேலிடம். அதேநேரத்தில் மதுரையில் பேசிய அண்ணாமலை, அண்ணா குறித்து அவர் பேசாத தகவல்களை வெளியிட்டு ஜாதியை வைத்து பிரித்தாளும் நடவடிக்கையில் இறங்கினார்.

இது அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அதிமுகவுக்கு கடும் தர்மசங்கடத்தை உருவாக்கியது. இதனால் பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக எடப்பாடி அறிவித்தார். அவர் அண்ணாமலை மீது உள்ள கோபத்தில் அறிவிக்கிறார். அதிமுகவினர் பலர் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளனர். எடப்பாடியின் உறவினர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அவரை எப்படியும் பேசி வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று பாஜ மேலிடம் கருதியது.

இதனால் கடந்த 2 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு நெருக்கமான வேலுமணி, தங்கமணி ஆகியோர் மூலம் பாஜ மேலிடம் பேசி வந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காமல் இருந்து வந்தார். இது டெல்லியில் ஆளும் பாஜவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்கள் பாஜ மேலிடத்துக்கு பயந்து கூட்டணி ேசருகின்றனர். பலர், பாஜவிலேயே சேர்ந்து விடுகின்றனர். ஆனால் எடப்பாடி மட்டும் பிடிவாதமாக இருக்கிறாரே என்று கருதினர். எச்சரிக்கையும் விடுத்தும் அவர் அசையவில்லை.

இதனால் எடப்பாடியுடன் பேசுவதை பாஜ மேலிடம் நிறுத்திக் கொண்டது. இனி அவருடன் எந்தப் பேச்சுவார்தையும் வேண்டாம் என்று அமித்ஷாவும், மோடியும் கூறிவிட்டனர். இதையடுத்து தமிழகத்தில் பாஜ தலைமையில் தனி அணி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டனர். இதற்காக அதிமுக, பாஜ கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்த தேமுதிக, பாமக, புதிய தமிழகம், தமிழக முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வத்துடனும் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. இதனால், கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு அவர்களின் செல்வாக்கிற்கு ஏற்ப வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாஜ கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுக மூத்த தலைவர்கள் சிலரை தொடர்பு கொண்ட டெல்லி மேலிடம், பாஜவுக்கு வராவிட்டால் உங்கள் மீது வழக்கு பாயும் என்று எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து பல தலைவர்களை இழுக்க பாஜ மேலிடம் தொடங்கிவிட்டது. இதனால் தமிழக அரசியல் ஓரிரு நாளில் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

20 + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi