புதுடெல்லி: விமானம் தரையிறங்கிய அடுத்த 30 நிமிடத்தில் அனைத்து பயணிகளுடன் பெட்டிகளும் வழங்கப்பட வேண்டுமென விமான போக்குவரத்து பாதுகாப்பு (பிசிஏஎஸ்) அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உத்தரவின் பேரில், விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு கடந்த ஜனவரி மாதம் 6 முக்கிய விமான நிலையங்களில் பயணிகளின் பெட்டிகள் விநியோக பணியை ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், விஸ்தாரா, ஏஐஎக்ஸ் கனெக்ட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 7 விமான நிறுவனங்களுக்கு கடந்த 16ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
அனைத்து விமான நிறுவனங்களின் செயல்திறன் வாரந்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவை மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் முழு விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. சேவை தர விதிகளின்படி, விமானம் தரையிறங்கிய அடுத்த 10வது நிமிடத்தில் பயணிகளின் முதல் பெட்டி டெலிவரி செய்யத் தொடங்க வேண்டும். 30 நிமிடத்தில் கடைசி பெட்டியை டெலிவரி செய்ய வேண்டும். எனவே, விமானம் தரையிறங்கிய அரை மணி நேரத்தில் அனைத்து பயணிகளின் பெட்டிகளும் விநியோகிக்கப்படுவதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.