திருமலை : கோஸ் மால் பகுதியைச் சேர்ந்த சுவாதி பிழைப்புக்காக அப்சல்கஞ்ச் பகுதிக்கு வந்து உப்புகுடா ரயில் நிலையம் அருகே உள்ள உஸ்மானியா மருத்துவமனையின் ஓய்வு அறையின் நடைபாதையில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இவருடன் தனது 2 மாத குழந்தையுடன் உஸ்மானியா மருத்துவமனையின் நடைபாதையிலேயே இரவில் தூங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அதே நடைபாதையில் 30 வயது பெண்ணும், 20 வயது வாலிபரும் தங்கியுள்ளனர்.
தங்கி இருந்த 3 நாட்களும் சுவாதி மற்றும் குழந்தையுடன் நெருக்கமாக பழகி உள்ளனர். இந்நிலையில், நேற்று முந்தினம் இரவு சுவாதி தனது குழந்தையை மடியில் வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத அந்த பெண்ணும், வாலிபரும் குழந்தையை எடுத்து கொண்டு அப்சல்கஞ்ச் பேருந்து நிலையத்துக்கு மெதுவாகக் கொண்டு சென்றனர்.
அங்கு பலக்னுமா செல்லும் பேருந்தில் ஏறி சென்றனர். அரை மணி நேரம் கழித்து தூங்கி எழுந்த சுவாதி குழந்தையை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.
3 நாட்களாக தன்னுடன் இருந்தவர்களே குழந்தை வெளியே அழைத்துச் சென்று இருக்கலாம் என முதலில் நினைத்தார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர்கள் வராததால், உடனடியாக அப்சல்கஞ்ச் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் வழக்கு பதிவு செய்து மருத்துவமனை மற்றும் அப்சல்கஞ்ச் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை கடத்தி சென்ற இருவரையும் பிடித்து அவர்களிடம் இருந்து குழந்தையை பத்திரமாக கொண்டு வந்து தாயிடம் ஒப்படைத்தனர். கடத்திச் செல்லப்பட்ட குழந்தை யாருக்காக கடத்திச் சொல்லப்பட்டது. குழந்தை கடத்தல் கும்பலுக்கும் இவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.