மும்பை: ஆன்லைனில் தங்களது மருந்துகளை விளம்பரப்படுத்துவதற்காக சச்சினின் பெயர், புகைப்படம், குரல்களை பயன்படுத்திய நிறுவனம் மீது மும்பை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை மும்பையை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று பயன்படுத்தி விளம்பரப்படுத்தியது. இதுதொடர்பாக டெண்டுல்கரின் உதவியாளர், மும்பை மேற்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதையடுத்து சச்சினின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது மும்பை காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மும்பையை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆன்லைன் விளம்பரத்தில் டெண்டுல்கரின் பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை பயன்படுத்தியது. அதற்காக பிரத்யேக இணையதளமும் வெளியிடப்பட்டது.
ஆனால், டெண்டுல்கர் தரப்பில் தனது பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த எந்த நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கவில்லை. இருந்தும் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக விளம்பரம் செய்யப்படுவதாக, அவரது சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்), 465 (போலி) மற்றும் 500 (அவதூறு) ஆகியவற்றின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினர்.