சென்னை: சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம் பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ கடந்த செப்.2ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை புவி வட்டபாதையில் சுற்றி வந்த ஆதித்யா விண்கலம் 5 சுற்றுகளை முடித்து 5 கட்ட உயரம் அதிகரிக்கும் பணிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதையடுத்து பூமியை சுற்றி முடித்த பின் தன் இலக்கை நோக்கி விண்கலம் தனது பயணத்தை தொடங்கியது. இந்நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியில் இருந்து 9.2லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆதித்யா எல்1 விண்கலம் பூமியில் இருந்து 9.2லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்து பூமியின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறி உள்ளது. விண்கலம் தற்போது சூரியன்-பூமி எல் 1 புள்ளியை நோக்கி தனது பாதையை தொடங்கியுள்ளது. பூமியின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து விண்கலம் வெளியேறுவது என்பது இரண்டாவது முறை, ஏற்கெனவே செவ்வாய் கிரக ஆய்வுக்காக விண்கலம் பூமியில் இருந்து வெளியேறியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.