மதுராந்தகம்: ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு வளாக தேர்வில், 100 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகளை கல்லூரியின் தாளாளர் வழங்கினார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பிற்கான நேர்முக தேர்வு கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில், கார் உற்பத்தி நிறுவனங்கள், இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் கல்லூரியில் மாணவ, மாணவிகளிடம் நேர்முக தேர்வு நடத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்களை தேர்வு செய்தன. இதில், வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கணினி துறை தலைவர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில், ரெனால்ட் நிசான், டிவிஎஸ் சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், அப்பல்லோ இன்ஜினியரிங், ஈட்டான் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு குறித்து சிறப்புரையாற்றினர். இதனைத்தொடர்ந்து, வேலை வாய்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தாளாளர் கோ.ப.செந்தில்குமார் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துறை தலைவர்கள் வெங்கடசுப்பிரமணியன், பிரபு, இளவழகன், ஆதிகேசவன், நிர்வாக அலுவலர் அரிகிருஷ்ணன், தலைமை கணக்காளர் பட்டு, மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். இறுதியில், கணிதவியல் துறை தலைவர் நித்தியானந்தம் நன்றி கூறினார்.