Sunday, May 19, 2024
Home » அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியை போல!

அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியை போல!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கர்நாடக மாநிலத்தில் கொள்ளே என்ற ஊரில் சுமதி என்னும் பெண்மணி தன் கணவனுடன் வாழ்ந்துவந்தாள். அப்பொழுது கொங்கு தேசத்தில் திடீரென பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அங்கு வாழும் மக்கள், வாழ முடியாத துயரத்தில், தங்களின் உற்றார் உறவினர் ஊர்களுக்கு சென்றனர். சுமதி கணவன் கொங்கிலாச்சானனுடன் ஸ்ரீரங்கம் வந்து அடைந்தாள். “பொதுவாக எங்கும் திரிந்து ரங்கம் வந்து சேர்’’ என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு ஏற்ப, சுமதியும் அவள் கணவன் கொங்கிலுடன் ஸ்ரீரங்கம் வந்து அடைந்தாள். அவளுக்கு ஸ்ரீரங்கம் மிகவும் பிடித்திருந்தது. அவள் வீட்டிற்கு எதிரே ராமானுஜர் மடம் இருந்தது.

ஸ்ரீரங்கம் நம்பெருமாளை சேவிக்க வரும் பக்தர்களுக்கு, அங்கு அன்னதானம் வழங்கினர். இதனால் ராமானுஜர், தினமும் வரும் பக்தர்களுக்கு, பிரீத்தி மற்றும் அமுதுடன் நல்லறிவுரையும் கொடுத்து அனுப்பினார். உஞ்சவிருத்தை எடுத்து உண்பது வழக்கம் அப்படி ஒரு நாள் ராமானுஜர், சுமதி தங்கியிருந்த மாளிகைக்கு எழுந்தருளினார். திருவீதியில் அவர் வந்து நின்றதுமே அவரிடம் சுமதி, “சுவாமி தங்கள் மடத்தில் குறைவில்லாமல் அன்னம் வழங்கப்படுகிறது, நீங்கள் ஏன் வீதிகளில் கையேந்த வேண்டுமென கேட்டாள்.

ராமானுஜர் சிரித்துக்கொண்டே.. “அம்மணி… துறவிகள் 7 வீடுகளில் உஞ்சவிருத்தை எடுத்தே உண்ண வேண்டும். இதுதான் தர்மசாஸ்திரம். துறவிகள் அடுத்த பொழுதுக்கு (நாளைக்கு) என்று சேர்த்து வைக்கக் கூடாது. அது அதர்மம் ஆகும்’’ என்று கூறினார். அதன் பின்பு, எம்பெருமான் பெருமைகளை எடுத்துரைத்தார். செவியில் “ஓம் நமோ நாராயணா’’ எனும் எட்டெழுத்து மந்திரத்தை தியானிக்கும் படி கற்பித்துச் சென்றார். அதன் பின்னர், கொங்கில் பிராட்டி தினமும் ஜெபிக்க, கொங்கு நாட்டில் பஞ்சம் தீர்ந்து மழை பொழிந்தது. விளைச்சல் அமோகமாக விளைந்தது. கொங்குதேசம் மொத்தத்தில் சுபிட்சமாக திகழ்ந்தது வளமும் செழிப்பும் அடைந்தது. கொங்கு நாட்டிற்கு சுமதி தன் குடும்பத்துடன் திரும்பினாள்.

அதற்கு முன் ராமானுஜரிடம் வணங்கி, “உடையவரே.. சுவாமி… தாங்கள் போதித்த திருமந்திரம் எட்டெழுத்து நினைவுக்கு வரவில்லை. எனவே தாங்கள் அம் மந்திரத்தை மீண்டும் அடியேனுக்கு போதிக்க வேண்டும்’ எனக் கேட்டாள். அவரும் திருமந்திரம் ஓதினார். கேட்டுக் கொண்டாள் சுமதி. “உடையவரே தங்களிடம் ஒன்று கேட்பேன் தந்தருள வேண்டும்’’ என்று விண்ணப்பித்தாள். அவர் தயங்கிய படி “அம்மா.. நான் ஒரு சந்நியாசி என்னிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது தாயே’’. என்றார். “குருவே! தாங்கள் தர வேண்டும். தங்களுடைய அடியை’’ என்று கேட்டாள்.

(அடி என்றால் பாதுகை) “தங்களின் நினைவாக வைத்து பூஜிக்க இந்த சிஷ்யைக்காக தரவேண்டும். கிடைத்தால் என் ஜென்மம் சிறப்படையும்’’ என்றாள்.உடையவரும் அடியைத் தந்தார். அதன் பிறகு பாதுகையையே அவர் அணியவே இல்லை. சுமதி அடியைப் பெற்றுக்கொண்டு, கொங்குதேசம் திரும்பினாள். ஸ்ரீரங்கம், கிருமி கண்ட சோழ மன்னர் இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். திருமாலை துதிக்கும் யாரையும் பலவிதத்தில் இன்னல் கொடுத்துவந்தார்.

உடையவர், ஒரு காலகட்டத்தில், ஸ்ரீரங்கத்தை விட்டு கொங்கு தேசம் சென்றார். பரதன் எவ்வாறு ராமன் பாதுகையை வைத்து ராஜ்ஜியத்தை ஆண்டாரோ.. அவ்வாறு சுமதியும், உடையவர் பாதுகையை வைத்து பூஜித்தாள். பெற்றெடுத்த குழந்தையையும் ஆசையுடன், கற்ற உபதேச மந்திரத்தையும், மறக்காது தியானித்தாள். என்றாவது ஒருநாள் தன் இல்லத்திற்கு ராமானுஜர் எழுந்தருளுவார். என்ற நம்பிக்கையுடன் பூஜித்த அவளின் பக்தி வீண்போகவில்லை. ஒருநாள் சுமதி வீட்டுக்கு உடையவர், சீடர்களோடு சேர்ந்து அமுது உண்டார். “கொங்கு பிராட்டியே.. உனது தூய்மையான பக்தி உனக்கு முத்தியை தரும்’’ என்று அருளாசி வழங்கினார்.

தொகுப்பு: பொன்முகரியன்

You may also like

Leave a Comment

fourteen − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi