திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் எம்பியாக இருப்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர். இந்நிலையில், பிரபல நடிகை ஷோபனா பாஜ சார்பில் திருவனந்தபுரத்தில் வேட்பாளராக போட்டியிடப்போவதாக தகவல்கள் பரவின. இதுவரை அவர் இந்தத் தகவலை மறுக்கவில்லை.
இந்நிலையில் திருச்சூரில் சசி தரூர் நிருபர்களிடம் கூறியது:
திருவனந்தபுரம் தொகுதியில் பாஜ சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என தெரியவில்லை.
அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயம் மற்றும் விரக்தி காரணமாக பல நேரங்களில் பல பெயர்களை கூறுகின்றனர். இந்தத் தொகுதிக்கு யார் யார் வரப்போகிறார்கள் என்பதை நான் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நடிகை ஷோபனா என்னுடைய நல்ல நண்பர். சமீபத்தில் நான் போனில் அவருடன் பேசினேன்.
திருவனந்தபுரம் தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் என்னிடம் கூறினார். இந்தத் தொகுதியில் யார் போட்டியிட்டாலும் அவர்களை குறைத்து மதிப்பிட மாட்டேன். பாஜவின் மதவாத அரசியல் கேரளாவில் விலை போகாது. ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடக் கூடாது என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு சரியல்ல. அப்படியென்றால் காங்கிரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.