திருமலை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வரும் 10ம் தேதி(நாளை மறுதினம்) விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு டோலிவுட் நடிகர் நவதீப்புக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மாதப்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குடிமல்காபூர் போலீசாருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரியர்கள் 3 பேரை கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், டோலிவுட் நடிகர் நவ்தீப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த வழக்கில் நடிகர் நவ்தீப்பை போலீசார் குற்றவாளியாக சேர்த்து விசாரணையை தொடங்கினர். நடிகர் நவ்தீப்பிடம் ஏற்கனவே 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நவ்தீப்புக்கு தற்போது அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசில் வரும் 10ம் தேதி(நாளை மறுதினம்) அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நவ்தீப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.