சென்னை: கோடம்பாக்கத்தில் ஏசி சர்வீஸ் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி பதிவுகள் மூலம் தேடி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன்(45). இவர் அதே பகுதியில் ‘ஸ்ரீ விநாயகா எலக்ட்ரிக்கல் சர்வீஸ்’ என்ற பெயரில் ஏசி சர்வீஸ் கடை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வழக்கம் போல் கடந்த 6ம் தேதி கடையை மூடிவிட்டு சுரேந்திரன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பிறகு சொந்த பணி காரணமாக 2 நாட்கள் கடையை திறக்கவில்லை. பின்னர் நேற்று முன்தினம் கடையை திறக்க சுரேந்திரன் வந்த போது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது, வங்கியில் வாங்கி கடனை கட்ட வைத்திருந்த ரூ.4 லட்சம் பணம் மாயமாகி இருந்தது. உடனே சம்பவம் குறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்த போது, மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் பூடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.