அஜ்மீர்: ராஜஸ்தானில் குற்றவாளிகளை தேடி போன கேரள போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கேரள மாநிலம் ஆலுவா ரூரல் போலீஸ் எல்லையில், திருட்டு வழக்கில் ெதாடர்புடைய ஷேஜாத், சஜித் ஆகிய இரு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இருவரும், வெவ்வேறு மாநிலங்களில் தலைமறைவாக இருந்தனர்.
இந்நிலையில் குற்றவாளிகள் இருவரும், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து ராஜஸ்தான் சென்ற ஆலுவா போலீஸ் தனிப்படையினர், இரு குற்றவாளிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்த இருவரும், தாங்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் கேரள போலீசாரை நோக்கி சுட்டனர். இருந்தும் போலீசார் உஷாராக செயல்பட்டு, 3 மணி நேர போராட்டங்களுக்கு பின்னர் குற்றவாளிகள் ஷேஜாத், சஜித் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் கேரள காவல்துறையினருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. தொடர்ந்து இரு குற்றவாளிகளும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் ஆலுவாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.