சென்னை: வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாபர் சாதிக்கை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிகாலை இன்டிகோ விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் தென் மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகமான அயப்பாக்கத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 23 பேருக்கு போதை கடத்தலில் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதைதொடர்ந்து ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 23 பேர் யார் யார், அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில், ஜாபர் சாதிக் அளிக்கும் பதிலை தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்து வருகின்றனர். மேலும், அவரிடம் போதை பொருளுக்கான மூலப்பொருட்களை யாரிடம் இருந்து வாங்கினார். சென்னையில் இருந்து எத்தனை நாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டது உள்ளிட்ட பின்னணி குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் தான் முழு விவரங்கள் தெரியவரும் என தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.