புதுக்கோட்டை: ஆடி மாதத்தையொட்டி விராலிமலை ஆட்டுச் சந்தையில் ஒரு கோடி ரூபாயை தாண்டி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆடி மாதத்தில் கோயில் திருவிழாக்கள், காதுகுத்து உள்ளிட்டவை நடைபெறும். இதனால் வழக்கமாக இறைச்சி விற்பனை அதிகமாக இருக்கும். அந்த வகையில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
பல்வேறு ஊர்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு வந்தன. மேலும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆடுகள் வாங்க குவிந்தனர். வெள்ளாடுகள் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்த போதிலும் பலர் அதனை வாங்கி சென்றனர். ஒரே நாளில் ஒரு கோடி ரூபாயை தாண்டி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த ஆடுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.