அன்னூர்: தன்னிடம் இருந்து பிரித்து அழைத்து சென்றதால் காதலியின் 2வது கணவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி, காந்தி மார்க்கெட்டை சேர்ந்தவர் கணேசன் (32). இவரது மனைவி சுசீலா (23). சுசீலாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து கணேசனை 2வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணேசன் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகருக்கு வந்தார். இங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். வேலை செய்தபோது கணேசனுக்கும், தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த லோடுமேன் பாலாஜி (24) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.
நண்பனாக அடிக்கடி கணேசன் வீட்டிற்கு பாலாஜி வந்து சென்றார். அப்போது சுசீலாவிற்கும், பாலாஜிக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த கணேசன் இருவரையும் கண்டித்தார். இதனை ஏற்க மறுத்த சுசீலா கணவர் மற்றும் குழந்தைகளை உதறிவிட்டு பாலாஜியுடன் வசித்து வந்தார். இதுகுறித்து கணேசன் அவிநாசி, திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கணேசனுக்கும், சுசீலாவுக்கும் இடையே சமரசம் செய்யப்பட்டது. பாலாஜியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அதன்பின்னர் இருவரும் குழந்தைகளுடன் சுல்தான்பேட்டை செஞ்சேரி பிரிவு பகுதியில் குடியேறினர். அங்கு போதிய வேலை கிடைக்காததால் கோவை, அன்னூரில் உள்ள கட்டிட மேஸ்திரியை பார்க்க நேற்று வந்தார். அவரை பின் தொடர்ந்து பாலாஜி வந்தார். காதலியை பிரித்த ஆத்திரத்தில் இருந்த பாலாஜி அன்னூர் பஸ் நிலையம் அருகே வந்தபோது கணேசனின் தலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றார்.அவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.