காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் உள்பட 5 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்திருந்தனர். பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகனிடம் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தனர்.
அப்போது, மற்றொரு கட்சியை சார்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வந்ததால், ஆத்திரமடைந்த பாமகவினர் `காவல் துறை சரியில்லை ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. அவர்களை மட்டும் இவ்வளவு பேர் அனுமதித்திருக்கிறார்கள்’ என சத்தம் போட்டனர். பின்னர், கலெக்டர் அலுவலகம் வெளியே சென்று பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர், போலீசார் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வது குறித்து மைக்கில் பேசி, சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.