மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பஞ்சு மெத்தை குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. செங்கல்பட்டு அடுத்த மேலவலம்பேட்டை பகுதியில் வேடந்தாங்கல் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரமாக பெட் தயாரிப்பு நிறுவனத்தின் கழிவுகளைச் சேர்த்து வைக்கும் குடோன் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனால் நெடுஞ்சாலையில் தீயின் அனல் மிக உக்கிரமாக இருந்தது. இதன் காரணமாக அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் எரிந்தது பஞ்சு கழிவு பொருட்கள் என்பதால் தீயின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதனால், தீயை அணைப்பதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. மேலும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை எனவும், அந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு லாரி மட்டும் தீயில் சிக்கி நாசமானதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.