மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (60). விவசாயி. இவரது மனைவி மாலாதேவி (52). இவர்களுக்கு வெங்கடேஷ் பிரசாத் (28), விக்னேஷ் (26) என இரண்டு மகன்கள் உள்ளனர். மினி வேன் டிரைவர் வேலை பார்த்து வந்த வெங்கடேஷ் பிரசாத், தினம்தோறும் மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் பிரசாத் வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதை தம்பி விக்னேஷ் தட்டி கேட்டதற்கு அவரையும் அடித்ததோடு, தந்தை கஜேந்திரனையும் தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரன், விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து வெங்கடேஷ் பிரசாத்தை கட்டையால் அடித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அதிர்ச்சியடைந்த இருவரும், வெங்கடேஷ் பிரசாத் உடலை வீட்டின் அருகில் இருந்த வயல் வெளியில் வீசினர். தகவலறிந்து வந்த போலீசார் வெங்கடேஷ் பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கஜேந்திரன் மற்றும் அவரது இளைய மகன் விக்னேஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.