Tuesday, May 21, 2024
Home » வேடசந்தூர் அருகே மல்லீஸ்வரர் கோயிலில் 4 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோயில் சிற்பம்

வேடசந்தூர் அருகே மல்லீஸ்வரர் கோயிலில் 4 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோயில் சிற்பம்

by Mahaprabhu

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே ஆசாரிப்புதூர் கிராமத்தில் மலை குன்று ஒன்று உள்ளது. இந்தக் குன்றின் மீது உள்ள மல்லீஸ்வரர் கோயில் பாண்டியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் குன்றின் பாறைகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் கற்கால பெருங்கற்கால சின்னங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. குன்றின் அடிவாரத்தில் நுழைந்தான் பாறை என்னும் சிறுபாறையின் கீழ் கற்காலத்தை சேர்ந்த ஒரு ஈமக்கல் திட்டை உள்ளது. இது 4 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிற்பம் என்பது தெரியவந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரலாற்று ஆய்வாளர்களான விஸ்வநாததாஸ், சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் கல்வெட்டை ஆய்வு செய்து, அது 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை உறுதி செய்தனர். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கிணற்றின் அருகே பழமை வாய்ந்த இரண்டு நீதி பரிபாலன கல் தூண்கள் உள்ளன. இது 200 ஆண்டு பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள பாறைகளில் தமிழில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாறையில் தமிழில் எழுதப்பட்ட வாசகங்கள் குறித்து ஆய்வு செய்யவும் மேலும் அப்பகுதியில் உள்ள சிற்பங்களையும், கோயில்களையும் தீவிர ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஐந்து அடி நீளம் உள்ள பலகை கல்லில் குறுக்கும் நெடுக்குமாக ஏழுக்கு ஏழு என்ற அளவில் கட்டங்கள் சதுரமாகவும் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த குறியீடு ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழு பிறவிகள் உள்ளதை குறிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பாறையின் மேல் பகுதியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு கல்லில் ஒரு பகுதி செதுக்கப்பட்டு அதில் சூரியன் சந்திரன் உருவம் பொறிக்கப்பட்டு அதன் கீழ் சிவலிங்கமும், நந்தி உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஈமகல்திட்டை கற்காலத்திலிருந்து பெருங்கற்காலம் சங்க காலம் வரை தொல்லியல் சின்னமாக இப்பகுதி மக்கள் வசித்த இடமாக உள்ளது. மேலும் இப்பாறையின் அருகே உள்ள ஓடையில் கற்கால கல் ஆயுதங்கள் கிடைத்துள்ளன. இரும்பு உருக்கிய பாறை கற்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர்கள் விஸ்வநாததாஸ், தளிர் சந்திரசேகர் வரலாறு மாணவர் முரளிதர், ஆசிரியர் கண்ணன் மற்றும் லெமூரியன் குரு இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இன்னும் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

1 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi