ஜெயங்கொண்டம்: அரியலூர் அருகே ரூ.25 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சாமியாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் தா.பமூர் அருகே உள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது 2வது மனைவி ஜூலி(48). இவரது வீட்டில் புதையல் எடுத்து தருவதாக கூறி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் திண்டிவனத்தைச் சேர்ந்த கொல்லிமலை சித்தர் தியாகம் டேனியல்(62), அவரது மனைவி தீபா ஜெனிபர்(43) ஆகியோர் ரூ.25 லட்சம் பெற்றுக் கொண்டு புதையல் எடுத்து தரவில்லை. கொடுத்த பணத்தையும் திரும்பி தரவில்லை என தெரிகிறது.
இதுகுறித்து ஜூலி கொடுத்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சித்தர் தியாகம் டேனியல், அவரது மனைவி தீபா ஜெனிபர் ஆகியோரை திண்டிவனம் அருகே கடந்த 20ம்தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு 21ம்தேதி இருவரையும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் தியாகம் டேனியலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. போலீசார் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.