ஊட்டி : தொட்டபெட்டா அருகேயுள்ள தேயிலை பூங்காவில் அலங்கார தாவரங்களை கொண்டு புதிய அலங்காரம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா மற்றும் தொட்டபெட்டாவில் உள்ள தேயிலை பூங்கா ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். இதனால், அனைத்து பூங்காக்களிலும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொட்டபெட்டாவில் உள்ள தேயிலை பூங்காவில் தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு சாதனங்கள் அடங்கிய பெரிய புல் மைதானம் உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள் இந்த விளையாட்டு சாதனங்களில் விளைாடி மகிழ்வது வழக்கம். மேலும், இப்பூங்காவில் பெரிய புல் மைதானம், தேயிலை செடிகள் மற்றும் தேயிலை செடிகளின் நடுவே அழகான நிழற்குடைகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. இதனை காண நாள் தோறும் ஏராளமான சுறு்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு செல்கின்றனர். இந்நிலையில், இப்பூங்காவில் தற்போது அலங்கார தாவரங்களை கொண்டு செயற்கை நீர் வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. பல வண்ணங்களை கொண்ட அலங்கார செடிகளை கொண்டு இந்த அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து பார்ப்பதற்கு இயற்கை நீர்வீழ்ச்சி போல் காட்சியளிக்கிறது. இது மட்டுமின்றி, இதன் அருகே நீர் வீழ்ச்சி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், இயற்கையாக தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன், அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்….