ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணை பகுதிகளுக்கு செல்லும் நபர்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை நீர் நிலைகளில் வீசி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவது மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களையும் பார்வையிட ஆர்வம் காட்டுகின்றனர். நீலகிரி சுற்றுலாத்தலங்கள் நிறைந்த மாவட்டம் மட்டுமின்றி அதிக வனப்பகுதிகள் உள்ள மாவட்டமாகவும் விளங்கி வருகிறது. மேலும் நீர்மின் உற்பத்திக்காக பல்வேறு அணைகளும் உள்ளன. மின்வாரிய அணைகள், அடர்ந்த காப்பு காடுகளுக்குள் செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை. ஊட்டி தவிர்த்து புற நகர் பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் நபர்கள் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் மின்வாரிய அணை பகுதிகளில் அத்துமீறி நுழைகின்றனர். குறிப்பாக எமரால்டு, அவலாஞ்சி அணை பகுதிகளில் அத்துமீறி நுழைகின்றனர். மேலும் அணையில் இறங்கி விளையாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். வனப்பகுதி மற்றும் மின்வாரிய அணைப்பகுதிக்குள் நுழையும் நபர்கள் அங்கு உணவு மற்றும் மது போன்றவற்றை அருந்தி விட்டு மீதமான உணவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், காலி மது பாட்டில்களை வீசி விடுகின்றனர். இதுமட்டுமின்றி அணைக்குள் வாகனங்களை இயக்கி வாகனங்களை கழுவுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் காப்பு காடுகளுக்குள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நுழைகின்றனர். இதனால் அவர்களை யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் தாக்க கூடிய அபாயமும் நீடிக்கிறது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் வனப்பரப்பு அதிகமாக உள்ளது. இதே போல் மின் உற்பத்தி செய்வதற்கு நீரை தேக்கி வைக்கும் அணைகள், நீர் தேக்கங்களும் உள்ளன. குறிப்பாக நீர் தேக்கம், அணைகள் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக விளங்கி வருகிறது. இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் நபர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை வீசுகின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே இதனை கண்காணிக்க வேண்டும், என்றனர்….