புதுடெல்லி: காவல்துறையில் முன்னாள் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர் கடந்த 2021ம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை நீதிமன்றம், ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து இது கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அவருக்கு எந்தவித நிவாரணமும் வழங்க முடியாது என்றும், அதேப்போன்று மூன்று ஆண்டு சிறை தண்டனையையும் நிறுத்தி வைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து அவரது மனுவை கடந்த வாரம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ராஜேஷ் தாஸ் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதித்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அதேப்போன்று மூன்று ஆண்டு சிறை தண்டனை என்பதையும் ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
previous post