பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு அருணோதயா நகரில் வசிக்கும் பழங்குடி மக்கள் 17 பேருக்கு, மீன்வளத்துறையின் மீனவர் நலவாரிய அடையாள அட்டை மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது அத்திப்பட்டு ஊராட்சி உள்ளது. இங்குள்ள அருணோதயா நகரில் வசிக்கும் பழங்குடி மக்கள் பழவேற்காடு ஏரி பகுதியில் அமைந்துள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதிகளிலும் ஆற்றுப்பகுதிகளிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
48 குடும்பங்களை சேர்ந்த இவர்களுக்கு இதுவரை மீனவர் என்ற அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. மேலும் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், தற்போது அந்த கிராமத்திற்கு சாலை வசதியும் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தரும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனை மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி ஏற்பாடு செய்திருந்தார். மேலும் அதன் ஒரு பகுதியாக இந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த மீனவர் அந்தஸ்தை பெறும் மீன்வள துறையின் மீனவர் நல வாரியத்தில் அடையாள அட்டை பெறுவதற்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன் முதற்கட்டமாக 17 பேருக்கு மீனவர் நல வாரியத்தில் அடையாள அட்டையினை ஒன்றிய குழு தலைவர் ரவி ஏற்பாடு செய்து நேற்றுமுன்தினம் மாலை பெற்றுத் தந்தார். இதனை கிராம மக்களுக்கு அருணோதயா நகரிலேயே சென்று வழங்கினார். மேலும் விடுபட்டு உள்ள மற்ற நபர்க்கும் அடையாள அட்டை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், அத்திப்பட்டு ஒன்றிய குழு உறுப்பினர் சங்கீதா அன்பழகன், தலைமை கழக பேச்சாளர் சாம்ராஜ், சமூக ஆர்வலர் சௌரிராஜன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அத்திப்பட்டு பொது நல சங்கத்தின் நிர்வாகிகள் இளவரசன், கார்த்திக், அத்திப்பட்டு கிராம முன்னோடிகள் அன்பு, கோதண்டம், நாராயணன், சாக்ரடீஸ், ராஜசேகர், பிரவீன்விஸ்வநாதன், சிவா, சாகுல் ஹமீது மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.