தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீனவர்கள் விசைப்படகுகள், வலைகளை பழுதுநீக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் வங்க கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம்தேதி முதல் ஜூன் 14ம்தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள், இழுவை படகுகள் மீன்பிடி தடைகாலகமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கடந்த 14ம் தேதி முதல் தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 600 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 250 விசைப்படகுகளை பழுது பார்த்தல், வலைகளை சரிசெய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், புதிய வலைகளை பின்னும் பணியும் நடைபெறுகிறது. மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் நாட்டுப்படகுகள் மூலம் பிடிக்கப்பட்டு வரும் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் இருந்தும் மீன்கள் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.