சிவகங்கை, ஏப்.15: ஏப்.19ல் மக்களவை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி போலீசார் சார்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக மாவட்டத்தில் பிரச்னைக்குறிய கரும்புள்ளி கிராமங்கள், பதட்டமான கிராமங்கள், தேர்தல் காலங்களில் பிரச்னை ஏற்படும் கிராமங்கள், சாதி, மத ரீதியாக பிரச்னைக்குறிய கிரமங்கள், ரவுடிகள் லிஸ்ட், புதிய நபர்கள் குடியேற்றம் என பல்வேறு வகையில் தர வாரியாக போலீசார் கணக்கெடுப்பு நடத்தினர்.
இதையடுத்து ரவுடிகள், பிரச்னைக்குறிய நபர்கள், சந்தேகத்திடமான நபர்கள், பழைய குற்றவாளிகள் மற்றும் பிரச்னைகளில் ஈடுபடுவதாக அறியப்பப்பட்டவர்கள் மீது 107பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு கடந்த மாதம் இறுதி வரையில் 100பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 133ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை பகுதி போலீஸ் ஸ்டேசன்களில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆர்டிஓ கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். போலீசார் கூறியதாவது:இது தேர்தல் காலங்களில் வழக்கமாக எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ஒவ்வொரு ஸ்டேசன்வாரியாக அந்த ஸ்டேசன் கட்டுப்பாட்டில் உள்ள பிரச்னைக்குறிய நபர்கள் லிஸ்ட் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரச்னைக்குறிய நபர்கள் மீது தேர்தல் அறிவிப்பு காலத்தில் இருந்தே கூடுதல் கண்காணிப்பு செய்யப்படும். அமைதியான முறையில் தேர்தல் நடத்தவே இது போன்ற நடவடிக்கை என்றனர்.