கடந்த இரு நாட்களாக நடிகர் சூர்யாவை அண்ணாமலை வம்புக்கு இழுத்து வருவதற்கு அவரது ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தைக்கு உதயநிதி ஸ்டாலின் ரோலக்ஸ் என்று பெயர் வைத்தார் என்று சர்ச்சையை அண்ணாமலை கிளப்பி இருந்தார். ஆனால் உண்மையில் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று பெற்றோர் அமைச்சர் உதயநிதியிடம் கேட்டுள்ளனர். இப்போது என்ன பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார் அமைச்சர். அதற்கு பெற்றோர் ரோலக்ஸ் என்று அழைக்கிறோம் என்றவுடன் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். ஆனால், அமைச்சர் உதயநிதி தானாக எந்த பெயரையும் வைக்கவில்லை. இது முன்னாள் போலீஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு தெரிந்தும் அமைச்சர் உதயநிதியை குற்றம்சாட்டுவதுபோல அவர் நேரடியாக நடிகர் சூர்யவை வம்புக்கு இழுத்துள்ளார் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.
அதற்கு காரணம், நடிகர் கமல் நடித்த விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் ரோலக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்று சமூகநீதி பேசிவிட்டு மும்பைக்கு சென்று விட்டார் நடிகர் என்று நடிகர் சூர்யாவை பெயர் குறிப்பிடாமல் பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகளுக்கு கல்வி மேற்படிப்புக்காக உதவி செய்து நற்பெயரை பெற்று வருகிறார். திரைத்துறையில் கண்ணியமிக்க நடிகராகவும் விளங்குகிறார். இருப்பினும் நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவர் கோயில் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனை கட்டலாம் என்று ஏற்கனவே தஞ்சாவூரில் பேசி இருந்ததாலும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் என்று அவரது ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.
நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் இதுவரை பல்லாயிரம் பேருக்கு மேல் கோடிக்கணக்கில் கல்வி உதவி வழங்கியுள்ளார். ஆனால் பாஜ தலைவர் அண்ணாமலை தனது காலில் விழுந்த மாணவிக்கு கூட கல்லூரி அட்மிஷன் அல்லது கல்லூரி படிப்பிற்கு உதவி செய்யவில்லை என்பது உலகம் அறிந்தது. தன்னால் முடியாத ஒன்றை பிறர் செய்யும்போது கோபம் வருவது இயற்கை தான். அண்ணாமலையின் இயலாமையின் வெளிப்பாடே அவரது அவதூறு என சாடினார் சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகி. மேலும் சூர்யா, கொங்கு மண்டலத்தில் செல்வாக்கான சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த சமூகத்தை சேர்ந்தவர்தான் அண்ணாமலை. தன்னை விட தனது சமூகத்தில் யாரும் பெரியவராகிவிடக் கூடாது என்பதால்தான் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக உள்ள அதிமுகவுடன் வேண்டும் என்றே மோதல் போக்கை உருவாக்கி, கூட்டணியை உடைத்தார். தற்போது சூர்யாவையும் வம்புக்கு இழுத்து வருகிறார் என்கின்றனர் கொங்கு மக்கள்.