திருச்சுழி, மார்ச் 31: நரிக்குடி அருகே உள்ள முடுக்கன்குளம் கண்மாய் ஓடைப்பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் முடுக்கன்குளம் விஏஓ நம்பிராஜன் மற்றும் தலையாரி பிரபுவும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக முடுக்கன்குளத்தை சேர்ந்த வேல்முருகன் (50) ஓட்டி வந்த மாட்டு வண்டியில் அனுமதியின்றி அரசு புறம்போக்கு ஓடையில் அள்ளிய மணல் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விஏஓ நம்பிராஜன் கொடுத்த புகாரின் பேரில் மாட்டுவண்டியுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வேல்முருகன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.