சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, செந்தில் பாலாஜி மனுவில் மார்ச் 28ல் (நேற்று) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் மனுதாக்கல் செய்தார்.
அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த ஆவணங்கள் கிடைத்த பின் அதனடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விடுமுறை என்பதால், இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 4க்கு தள்ளி வைத்தார். இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததால் அவரை புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரது காவலை ஏப்ரல் 4 வரை நீட்டித்து சென்னை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.