சோழிங்கநல்லூர்: மாதவரம் பால் பண்ணை அ.சி.சி.நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். இவர்களது, மகன் பிரபு (13) மாதவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை டியூஷனுக்கு சென்றுவிட்டு வந்த பிரபுவை படிக்குமாறு கண்டித்துவிட்டு தாய் வளர்மதி வெளியே சென்றுள்ளார். பின்னர், 8 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பிரபு புடவையால் தூக்குப்போட்ட நிலையில் துடித்துக் கொண்டிருந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வளர்மதி அலறி கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்ப்பக்கத்தினர் உதவியுடன் பிரபுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் பிரபுவை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பால்பண்ணை இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.