மும்பை: ஐ போன் ஆர்டரை ரத்து செய்ததால் மன உளைச்சல் அடைந்த வாடிக்கையாளருக்கு ரூ.10,000 நஷ்டஈடு தர பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையின் தாதர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி ஐ போன் வாங்க பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை நிறுவத்தில் ஆர்டர் கொடுத்துள்ளார். அதற்காக அவர் தன் கிரெடிட் கார்டு மூலம் ரூ.39,628 செலுத்தி உள்ளார்.
ஜூலை 12ம் தேதி ஐ போன் டெலிவரி செய்யப்படும் என பிளிர்கார்ட் நிறுவனத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் 6 நாட்களுக்கு பிறகு அந்த நபர் கொடுத்த ஐ போன் ஆர்டர் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து வாடிக்கையாளர் பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, “எங்களின் டெலிவரி நிறுவனமான இ-கார்டின் டெலிவரி செய்யும் நபர் பலமுறை உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் ஆர்டர் ரத்து செய்தோம்” என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் வாடிக்கயைாளர் செலுத்திய பணத்தையும் திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் வேதனை அடைந்த அந்த வாடிக்கயைாளர் மும்பை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், “ஐ போன் ஆர்டரை பிளிப்கார்ட் ரத்து செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடு தர உத்தரவிட வேண்டும்” என முறையிட்டார். இதை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், “பிளிப்கார்ட் நிறுவனம் லாப நோக்கில் ஆர்டரை ரத்து செய்துள்ளது. இது சேவையின் குறைபாடு மற்றும் நியாயமற்ற செயல். எனவே மன உளைச்சலுக்கு ஆளான நபருக்கு ரூ.10,000 நஷ்டஈடு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டது.