பெரம்பூர்: பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 17 வருடம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வில்வேந்தன் (63). இவர் கடந்த 2007ம் ஆண்டு குடிபோதையில் ஒரு இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சில நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த அவர், அதன்பிறகு இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தான் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். பலமுறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதனையடுத்து வில்வேந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி எழும்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பல வருடங்களாக தேடியும் வில்வேந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று புளியந்தோப்பு போலீசார் வில்வேந்தனை சூளை பகுதியில் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.