சென்னை: தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்தே பாரத் ரயில் உள்பட பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.குமரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நெல்லையில் 31 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை கொட்டி வருகிறது. தூத்துக்குடியில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, குமரி, நாகர்கோயில், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது. மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் இடையிலான விரைவு ரயில் சேவை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டது. திருச்சி – திருவனந்தபுரம் இடையிலான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லமில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வந்து சேரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படுகிறது. கொல்லம் – திண்டுக்கல் இடையிலான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக அனந்தபுரி விரைவு ரயில் இயக்கம் செய்யப்பட உள்ளது. காச்சிக்குடா – நாகர்கோவில் இடையேயான ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. காச்சிக்குடாவில் இருந்து புறப்படும் ரயில் சேலம், ஈரோடு, பாலக்காடு, சோரனுர், எர்ணாகுளம், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் சென்றடையும்.
நெல்லை – சென்னை எழும்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை, இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை – குஜராத் மாநிலம் ஜாம்நகர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில், திருச்செந்தூர் – பாலக்காடு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுதவிர சென்னை – நெல்லை இடையேயான விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் – நாகர்கோவில் இடையேயான மற்றுமொரு விரைவு ரயில் கொடைரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.