சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த மாற்றுதிறனாளிகளின் உதவி உபகரணங்களை சிறப்பு முகாம்கள் மூலம் பழுது நீக்கம் செய்து தரப்படும் என தமிழ்நாடு மாற்றுதிறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுபற்றி துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்கள் (இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி மற்றும் மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி) தண்ணீரில் மூழ்கி சேதமடைந்திருந்தால், அதனை பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, பாதிப்படைந்தவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களை தொடர்புகொண்டு விவரங்களை பதிவு செய்யலாம். பெறப்படும் விவரங்களின் அடிப்படையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் உபகரணங்கள் பழுது நீக்கம் செய்யப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.