கொள்ளிடம், செப்.3: ‘‘கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: டிகேஎம்-13, ஏடிடி-54,டி ஆர்ஒய்-03, ஏடிடி-38 மற்றும் ஏடிடி-46 ஆகிய நெல் ரகங்கள் நடப்பு சம்பா தாளடி பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்கள் ஆகும். இதனை சாகுபடி செய்வதன் மூலம் மற்ற நெல் ரகங்களை விட 30 சதவிகிதம் கூடுதல் மகசூலை பெற முடியும். இந்த நெல் ரகங்கள் 130 முதல் 135 நாட்களில் அறுவடை செய்யக் கூடியதாகும். ஓர் ஏக்கருக்கு 5 முதல் 6 மற்றும் 9 டன் மற்றும் அதற்கு மேலும் மகசூல் தரக்கூடியது.
மேலும் இந்த நெல் ரகங்ளை பயிரிடுவதன் மூலம் பூச்சி தாக்குதலிலிருந்து பெரிதும் நெற்பயிரை பாதுகாக்க முடியும். அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நெற்பயிராகும். இவைகள் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்கள் ஆகும். வேளாண் துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ள இந்த வகையான நெற்பயிரை நடப்பு சம்பா தாளடி பருவத்தில் பயிரிட்டு விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.