காஞ்சிபுரம், செப்.3: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுவதற்கான நேரடி மாணவர் சேர்க்கை வரும் 15ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த மாதம் 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தற்போது வரும் 15ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம், சேர்க்கை உதவி மையத்தினை அணுகவும். கம்மியர் மோட்டார் வாகனம், தொழிற்பிரிவிற்கு 2 ஆண்டுகால பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல், ஆட்டோமேசன் மற்றும் இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன் பிரிவிற்கு ஓராண்டு பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
இந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித் தொகையாக மாதந்தோறும் ₹750, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, 2 செட் சீருடைக்கான துணி, தையற்கூலி, இலவச புத்தகங்கள், இலவச காலணி, இலவச வரைபட கருவிகள் மற்றும் இலவச பஸ்பாஸ் ஆகியன வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம் என்ற முகவரியிலும், 9444621245/ 8122374342 /860872855 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.