பள்ளிபாளையம், ஜூலை 15: பள்ளிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் ஆடி 18அன்று விமரிசையாக நடைபெறும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டு, கோயிலின் வங்கி கணக்கில் சேர்ப்பதற்காக திருச்செங்கோடு அறநிலையத்துறை உதவி செயல் அலுவலர் ரமணி காந்தன், ஆய்வாளர் வடிவுக்கரசி ஆகியோர் நேற்று கோயிலுக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த கோயில் நிர்வாக குழுவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோயிலுக்கு நிரந்தர மின் இணைப்பு இல்லை, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கழிப்பறைகள் இல்லை. கோயில் பூசாரிகளுக்கு சம்பளம் குறைவாக உள்ளதென அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதுவரை இந்த புகார்கள் ஏதும் அறநிலையத்துறையின் கவனத்திற்கு நிர்வாக குழுவினர் கொண்டு வரவில்லை. தற்போது உண்டியல் திறந்து அதில் உள்ள காணிக்கைகளை கோயில் வங்கி கணக்கில் சேர்க்க வந்துள்ளோம். நிர்வாக குழுவினரின் கோரிக்கை குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சுகுமார் சம்பவ இடத்திற்கு போலீசாருடன் வந்தனர். இருதரப்பினரையும் அவர்கள் சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் கோயில் உண்டியல் எண்ணப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக ₹1,31,131 செலுத்தியிருந்த தொகையும், ஒருகிராம் தங்கம், 12 கிராம் வெள்ளி ஆகியவை கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.