திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் பள்ளமாக உள்ள பிளாட்பாரத்தினை உயர்த்திக் கட்ட வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கோயில் நகரமாக விளங்கும் திருத்தணியில், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி – கல்லூரிகள் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரிவதற்காக, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும், திருத்தணி ரயில் நிலையத்திற்கு ரயில்கள் மூலம், ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
அதேபோல், திருத்தணி பகுதியில் இருந்து சென்னை, அம்பத்தூர், திருவள்ளூர், ஆவடி, அரக்கோணம் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இங்கிருந்து நாள்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருத்தணி மற்றும் சென்னைக்கு மின்சாரா ரயில்களை அதிகாலை முதல் இரவு வரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை – திருத்தணி வரும் ரயில்கள், தினமும் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருத்தணி 2வது பிளாட்பாரத்தில் இறக்கி விடப்படுகிறது. இந்த பிளாட்பாரம், ரயிலுக்கும் இடையே சுமார் 2 அடி பள்ளம் உள்ளதால், ரயிலில் ஏறுவதற்கு மாற்றுதிறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும் சிறுவர்கள் ரயிலுக்கும் இடையில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, திருத்தணி ரயில் நிலையத்தில் உள்ள 1, 2, 3வது ஆகிய பிளாட்பாரங்களை ரயிலுக்கும் இடைவெளி இல்லாமல், பாதுகாப்பான முறையில் அமைத்துத்தர வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு, ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.