புதுடெல்லி: சில வளர்ச்சியடைந்த நாடுகளின் தவறான கொள்கைகளால் வளரும் நாடுகள் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.அவர் பேசுகையில்,‘‘ 21ம் நூற்றாண்டின் இந்தியா, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்புக்கு மிகவும் தெளிவான திட்டத்தோடு முன்னோக்கி செல்கிறது. பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான பணியை கடந்த 2018ல் இந்தியா தொடங்கியது. மறுபக்கம் பிளாஸ்டிக்குகளின் மறுசுழற்சியை கட்டாயமாக்கியுள்ளோம்.
பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்புக்கு மிகவும் தெளிவான திட்டத்தோடு இந்தியா முன்னோக்கி செல்கிறது. வளரும் நாடுகள் வளர்ச்சியை மேற்கொண்ட பின்னர், சுற்றுச்சூழல் குறித்து கவலைத் தெரிவிக்கும் போக்கு உலகின் பெரிய மற்றும் நவீன நாடுகளுக்கிடையே இருந்து வருகிறது. அத்தகைய நாடுகள், வளர்ச்சியின் இலக்குகளை அடைந்தாலும், சுற்றுச்சூழலுக்கான உலக நாடுகள் விலைக்கொடுக்க நேர்ந்தது. வளர்ந்த நாடுகளின் தவறான கொள்கைகளால், வளரும் மற்றும் வளர்ச்சிப்பெறாத நாடுகள் பாதிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக சில வளர்ந்த நாடுகள், இந்த அணுகுமுறையை நிறுத்தவில்லை. அத்தகைய நாடுகளிடம் பருவநிலை நீதி குறித்து இந்தியா கேள்வி எழுப்பியது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.