புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கியது. உதவி ரயில் நிலைய மேலாளர் உட்பட 4 ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் 275பேர் உயிரிழந்தனர். சுமார் 190 உடல்கள்பாலாசோரில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் அடையாளம் காணும் நிலையிலேயே இல்லை. முன்பதிவு அற்ற பெட்டியில் பயணித்ததால் பெயர் உள்ளிட்ட விவரங்களும் இல்லை. என்ன செய்வது எனத்தெரியாமல் உறவினர்கள் தவித்து நிற்கின்றனர்.
பயங்கர விபத்தையடுத்து மீட்பு பணிகள் முடிவடைந்து ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மெயின் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் சோதனை முறையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டன. இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் 4 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு பாலாசோர் ரயில் நிலையத்தில் பணியாற்றிய 4 ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது பணியில் இருந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மோகண்டியிடம் இன்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலிமார் – சென்னை கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.