தர்மபுரி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் டெல்டா மாவட்டத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மாதந்தோறும் டெல்டா மாவட்டங்களிலிருந்து நெல் பாரம் தர்மபுரிக்கு சரக்கு ரயில் மூலம் வருகிறது. இவ்வாறு வரும் நெல் மூட்டைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கலெக்டர் பங்களா பின்புறத்தில் உள்ள திறந்தவெளி குடோனில் அடுக்கி வைத்து சேமிக்கப்படுகிறது.இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7,000 டன் அளவிலான நெல் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் விஜிலென்ஸ் போலீசார் வந்து சோதனை செய்துள்ளனர். இதில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள், தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தஞ்சாவூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தர்மபுரிக்கு சரக்கு ரயில் மூலம் 22 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்துள்ளது. அதில் 7 ஆயிரம் டன் நெல் குறைந்துள்ளதாக, விஜிலென்ஸ் போலீசார் தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் உத்தரவின் பேரில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைத்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல்களை அரவைக்கு அனுப்பினால்தான், குறைவான நெல் குறித்து தெரியவரும். தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தாமதம் ஆகிறது. விரைவில் கண்டுபிடித்து விடுவோம். அப்படி குறைந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.