கரூர், மே 22: கரூர் இனாம் கரூர் கிளை நூலகத்தில் கோடை காலத்தை பயிற்சி முகாமினை முன்னிட்டு தமிழ் வாசிப்பு மற்றும் தமிழ் நாப்பழக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இனாம்கரூர் கிளை நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ராஜலட்சுமி வரவேற்றார். தமிழ் பல்கலைக் கழக அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை பட்ட ஆய்வாளர் கார்த்திக் கலந்து கொண்டு, இல்லம் தேடி கல்வி கல்வி மைய மாணவர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழ் வாசிப்பு மற்றும் நாப்பழக்க பயிற்சிகளை வழங்கினார். இந்த பயிற்சியில், தமிழ் மொழியின் சிறப்புகள், மொழியின் தோற்றம், தமிழ் மொழியின் தொண்மை போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், தமிழ்மொழியை உச்சரிப்பது குறித்து பாடல்கள் பாடி நடனமாடி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த கோடை கால முகாமில், கவிதை போட்டி, ஒவியப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் பரிசு அளிக்கப்பட்டது. முகாமில், கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆத்திசூடி பரிசளிக்கப்பட்டது. தொடர்ந்து 42 மாணவர்கள் நூலக உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர். இதற்கான தொகையை தரணி ஜெய் வழங்கினார். தன்னார்வலர் பவித்ரா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர் மோகனசுந்தரம் செய்திருந்தார்.