சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டத் திருத்தத்துக்கு எதிர்காலமே இல்லை என்னும் நிலையில் இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டது ஏனென்று விளங்கவில்லை. இதில் உரிய கவனம் செலுத்தப்பட்டிருந்தால், சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதையும், அதனால் எழுந்த எதிர்மறையான விமர்சனங்களையும் தவிர்த்திருக்க முடியும். எனினும், இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு 2022 ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டுள்ள இந்த நான்கு சட்டத் தொகுப்புகளுக்கான வரைவு விதிகளை அறிவிக்கை செய்வதற்கு முன்பு அவற்றில் இடம் பெற்றுள்ள தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான பகுதிகளை நீக்கிவிட்டு அறிவிக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.