![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/2-179.jpg?type=webp&quality=80)
திருவனந்தபுரம்: கேரளாவில் ரயில் பயணிகள் மீது தீ வைத்த வழக்கு விரைவில் என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2-ம் தேதி கோழிக்கூடு மாவட்டம் இலத்தூர் அருகே ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீயில் இருந்து தப்பிக்க கீழே குதித்த 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் டெல்லி ஷாகின்பாக் பகுதியை சேர்ந்த ஷாருக் சைபி கைது செய்யப்பட்டு அவர் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. தாக்குதல் சம்பவத்தில் உள்ளூரில் இருந்து அவருக்கு கிடைத்த உதவிகள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏதோ ஒரு பயங்கரவாத அமைப்பின் துாண்டுதலின் அடிப்படையில் குற்றவாளி இந்த செயலை செய்துள்ளார். அவருக்கு உள்ளூர் உதவியும் கிடைத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது தனி மனித தாக்குதல் அல்ல. திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றவாளி ஒப்புக் கொண்டுள்ளார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விரைவில் விசாரணைக்கு எடுக்கும் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நாளில் இருந்தே என்.ஐ.ஏ. வழக்கின் போக்கை கவனித்து வருவதாக தெரிகிறது.