திருப்புவனம்: கீழடியில் 9ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கி நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை சார்பில் 3 கட்டம் அகழாய்வு, தமிழக தொல்லியல் துறை சார்பில் 5 கட்டம் அகழாய்வு என மொத்தம் 8 கட்ட அகழாய்வு பணிகள் இதுவரை நடந்துள்ளன. இந்நிலையில், கடந்த ஏப்.6ல் 9ம் கட்ட அகழாய்வை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், கொந்தகை, அகரம் தளங்களில் மூன்று கட்ட அகழாய்வுகள் நடந்துள்ளன. நேற்று கொந்தகை புதைவிட தளத்தில் 4ம் கட்ட அகழாய்வு தொடங்கியது.
முன்னதாக கொந்தகையில் நடந்த 3 கட்ட அகழாய்வில் 53 தாழிகள் (3 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 143 முதுமக்கள் தாழிகள்) கண்டெடுக்கப்பட்டது. அப்போது, 107 எண் கொண்ட முதுமக்கள் தாழி தமிழக தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் திறக்கப்பட்டது. அதில் 71 செ.மீ ஆழத்தில் 40 செ.மீ நீளமுள்ள இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டது. 108 சூதுபவள மணிகளும் கண்டெடுக்கப்பட்டன. 4ம் கட்ட புதைவிட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் மற்றும் தொல்பொருட்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கீழடி அகழாய்வு தள இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.