விருதுநகர், மார்ச் 1: விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு 98 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு இன்று துவங்கி மார்ச் 22 வரை நடைபெற உள்ளது. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களும் என மெத்தம் 98 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
பிளஸ் 2 தேர்வினை விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 4,457 மாணவர்கள், 5,194 மாணவிகள் என 9,651 பேரும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 5,478 மாணவர்களும், 6,550 மாணவியரும் என 12,028 பேரும் ஆக மொத்தம் மாவட்டத்தில் 9,935 மாணவர்கள், 11,744 மாணவியர் என 21,679 பேர் எழுத உள்ளனர். பிளஸ் 1 தேர்வுகள் வரும் மார்ச் 4ல் துவங்கி 25 வரை நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 9,809 பேரும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 12,847 பேரும் ஆக மொத்தம் 22,656 பேர் எழுத உள்ளனர். பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு கண்காணிப்பு பணிகளில் 102 முதன்மை கண்காணிப்பாளர்கள், 102 துறை அலுவலர்கள், 1,729 அறை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 126 பறக்கும் படைகளும், 21 வழித்தட அலுவலர்கள் என 2,080 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.