மயிலாடுதுறை, நவ.30: திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளதாவது:
இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனிதகுலம் அனைத்திற்குமான தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க அறக்கருத்துக்களடங்கிய திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம் வயதிலேயே மனப்பாடம் செய்தால் பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும். தாம் பெறும் கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்கள் உருவாக வழிவகுக்கும். எனவே, திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டுவது. மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாக அமையும், அதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ.15,000/- வீதம் பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப் பெறுகின்றனர்.
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதிபெற்றவர்கள் தெரிவுசெய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப் பெறுகிறார்கள். திறனாய்வு நாகப்பட்டினம் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்பெறும்.
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெறுவதற்கான விதிமுறைகள் 1330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். இயல் எண். பெயர், அதிகாரம் எண். பெயர். குறள் எண். பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும். மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும். அரசு / அரசு உதவிபெறும் / தனியார் / பதின்மப் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப் பரிசை இதற்கு முன் பெற்றவராக இருத்தல் கூடாது. திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப் பெறும்.
மேற்குறிப்பிட்டவாறு. திருக்குறள் முற்றோதும் திறன்படைத்த மாணவர்கள் www.tamilvalarchithurai.com < http://www.tamilvalarchithurai.com/ > என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அலுவலகத்தில் 29.12 2023 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04365-251281 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.