தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இங்கு வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் உணவு தானியம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் ராயபுரம் கூட்ஸ் ஷெட் பார்சல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை சென்ட்ரல் ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் ஆய்வாளர் சசிகலா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அப்போது ஒரு பார்சலில் 84 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த பாட்டில்கள் எங்கிருந்து வந்தன,
இதனை யார் டெலிவரி எடுக்க வருவார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். இந்தநிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜய்சிங் (58) என்பவர் பாட்டில்களை டெலிவரி எடுக்க வந்தார். அப்போது அவரை போலீசார் பிடித்தனர். மேலும் அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த வெளிநாட்டு மது பாட்டில்களை வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து, இந்த மதுபாட்டில்கள் எந்த ஊரில் இருந்து வந்தன, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என அஜய் சிங்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.