தோஹா: கத்தார் நாட்டின் மருத்துவமனையில் மருந்து உபகரண கொள்முதலில் மோசடியில் ஈடுபட்ட 8 இந்தியர் உட்பட 14 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. கத்தார் நாட்டின் ஹமாத் மெடிக்கல் கார்ப்பரேஷன் என்ற மருத்துவமனை நிறுவனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 இந்தியர் (ஒருவர் அதிகாரி) உட்பட 14 பேர் சேர்ந்து மருத்துவ உபகரண ஒப்பந்த மோசடியில் ஈடுபட்டனர்.
இவர்களில் 4 பேர் ஹமாத் மருத்துவமனை ஊழியர்கள் ஆவர். மேற்கண்ட நபர்களின் மீது அரசு டெண்டர்களில் ஊழல், பொது நிதியை முறைகேடு செய்தல், நம்பிக்கை மீறல் மற்றும் பதவி துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஹமாத் மருத்துவமனையின் அதிகாரியாக இருக்கும் இந்தியர் ஒருவர், இந்த வழக்கில் நான்காவது குற்றவாளி. அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், 31.3 கோடி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. முதல் பிரதிவாதியான கத்தார் நாட்டவருக்கு 15 வருட சிறைத்தண்டனையும் 72.9 மில்லியன் ரியால் அபராதமும், இரண்டாவது பிரதிவாதியான ஜோர்டானிய பிரஜைக்கு 11 வருட சிறைத்தண்டனையும் 17.1 மில்லியன் ரியால் அபராதமும்,
மூன்றாவது பிரதிவாதிக்கு 17.1 மில்லியன் ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. பாலஸ்தீன பிரஜைக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 14.4 மில்லியன் ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனமொன்றின் இரண்டு கத்தார் உரிமையாளர்களுக்கு ஐந்து மற்றும் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலா ஒருவருக்கு 22.8 கோடி ரியாலும், 2.5 கோடி ரியாலும் அபராதம் விதிக்கப்பட்டது.