சென்னை: 77வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 77வது சுதந்திர தினவிழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை முழுவதும் நாளை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதன் காரணமாக புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதி முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்துமுனையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் இதர இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் நாளை 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.